

நெல்லை:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் காமராஜ் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 52). இவர் கடந்த 2010-ம் ஆண்டு தீபாவளியன்று தேவிபட்டினத்தில் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்த உடையார் என்பவரிடம் கடனுக்கு இறைச்சி வாங்கி உள்ளார். ஆனால், அதற்கு பணம் கொடுக்கவில்லை.
உடனே, உடையார் சிவகிரி போலீஸ் நிலையத்தில் ராமகிருஷ்ணன் மீது புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆட்டு இறைச்சிக்கான ரூ.800-ஐ ராமகிருஷ்ணனிடம் வாங்கி, உடையாரிடம் கொடுத்து விட்டனர்.
மேலும், போலீஸ் நிலையத்திற்கு உடையாருக்கு ஆதரவாக தேவிபட்டினத்தை சேர்ந்த முருகன் என்பவர் சென்றிருந்தார். அப்போது முருகனிடம், நீ எனக்கு எதிராக எப்படி போலீஸ் நிலையத்திற்கு வந்தாய் என்று கூறி ராமகிருஷ்ணன் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 18.11.2010 அன்று தேவிபட்டினத்தில் முருகன், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் (35), காளியான் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராமகிருஷ்ணன் ஆதரவாளரான தேவிபட்டினம் காமராஜ் காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்ற அந்தோணிசாமி (48) என்பவர் முருகனிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். இதை தடுக்க முயன்ற இஸ்ரவேலுக்கும், காளியானுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த இஸ்ரவேல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 19.11.2010 அன்று பரிதாபமாக இறந்தார்.