மதுக்கூர் அருகே செல்போன் கடையில் திருட முயன்ற வாலிபர் அடித்துக்கொலை

மதுக்கூர் அருகே செல்போன் கடையில் திருட முயன்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஹாஜா மைதீன்
ஹாஜா மைதீன்
Published on

மதுக்கூர்:

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காசாங்காட்டை சேர்ந்த வினோத், சித்திரைசெல்வன், வைத்தீஸ்வரன், ராமதாஸ், வின்சென்ட், மணி ஆகியோர் வெளியூர் சென்று விட்டு காசாங்காடு ரெகுநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுக்கூர் இடையகாடு பகுதியை சேர்ந்த ரகுமதுல்லா மகன் ஹாஜாமைதீன்(வயது23), முத்துப்பேட்டை சேர்ந்த ரபீக் மற்றும் ஒருவர் வின்சென்ட் என்பவரின் செல்போன் கடை பூட்டை உடைத்து திருடிக்கொண்டிருந்தனர். அவர்களை கண்டு வினோத் மற்றும் அவரது நண்பர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது ரபீக் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். ஹாஜாமைதீன் ஓடும் போது எல்லை கல்லில் தடுக்கி கீழே விழுந்தார். அவரை அருகில் கிடந்த கம்பி மற்றும் கட்டையால் வினோத், சித்திரைசெல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட 6 பேரும் தாக்கினர்.

இதில் ஹாஜாமைதீன் பலத்த காயம் அடைந்தார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது ஹாஜாமைதீன் பலத்த காயமடைந்து மயக்க நிலையில் இருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹாஜாமைதீன் இறந்தார். 

இது குறித்து ஹாஜாமைதீன் தந்தை ரகுமதுல்லா மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், சித்திரைசெல்வன், வைத்தீஸ்வரன், ராமதாஸ், வின்சென்ட், மணி ஆகிய 6 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com