இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 13 வயது சிறுமியை கடத்திய சென்னை வாலிபர் கைது

ஈரோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தியதாக கைதான சென்னை வாலிபர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது
கைது
Published on

ஈரோடு:

இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். இதேப்போல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சில சமயம் இதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21). பிரிண்டிங் பட்டறை தொழிலாளி. இவர் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அப்போது ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் அஜித் ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிறுமி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அஜித் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டார்.

அஜித் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com