

கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன.
பஸ் போக்குவரத்தும் இல்லாததால் பிரதான நகரங்களுக்கு இடைப்பட்ட மெயின் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி காற்று வாங்குகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ள நிலையில் சிலர் எந்த கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் வாகனங்களில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்தும், சாலையின் நடுவே தடுப்புகளை வைத்தும் கண்காணித்து வந்தாலும், வாகன போக்குவரத்து அதிகமாகவே உள்ளது.
இந்த சூழலில் தஞ்சை மாவட்டம் மேலஉளூரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் கையில் பட்டா கத்தியுடன் உலா வருவது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டிச்செல்கிறார். அவருக்கு முன்புறம் ஒருவர் கத்தியை தூக்கி காட்டியபடி அமர்ந்து இருக்கிறார். இவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கும், இங்கும் உலா வருவதுபோல் காட்சிகள் பதிவாகி உள்ளன. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பட்டா கத்தியுடன் சிலர் மோட்டார் சைக்கிளில் உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.