காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

கல்லல்:

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஏரியூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். இவருடைய மனைவி செல்லப்பிரியா(வயது 28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக செல்லப்பிரியா காய்ச்சல், சளியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் செல்லப்பிரியா மதகுபட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஊசி போட்டு உள்ளார். சிறிது நேரத்தில் செல்லப்பிரியா மயங்கி விழுந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்சில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்,அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து செல்லப்பிரியாவின் தாயார் சின்னம்மாள் மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் செல்லப்பிரியா காய்ச்சலுக்கு மதகுபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊசி போட்டு கொண்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து அவர் இறந்து விட்டார். எனவே எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதால் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லப்பிரியாவின் உடல் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com