கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘பைபிள்’

துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் கையால் எழுதிய உலகின் மிகப்பெரிய பைபிளை உருவாக்கியுள்ளனர். அந்த பைபிளை துபாயில் உள்ள மார் தோமா தேவாலயத்திற்கு அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
துபாயில் கேரள குடும்பத்தினர் உருவாக்கிய கையால் எழுதப்பட்ட பைபிள் புத்தகம்
துபாயில் கேரள குடும்பத்தினர் உருவாக்கிய கையால் எழுதப்பட்ட பைபிள் புத்தகம்
Published on

துபாய்:

துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி சூசன் சாமுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்களுக்கு கருண் என்ற மகனும், கிருபா சாரா என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய பைபிள் புத்தகத்தை தயார் செய்துள்ளனர். இதற்காக 5 மாதங்கள் தினமும் 15 மணி நேரம் இந்த பைபிளை உருவாக்க செலவிட்டுள்ளனர்.

முழுவதும் கையால் எழுதப்பட்ட இந்த பைபிள் 1,500 பக்கங்களுக்கு மேல் உள்ளது. மொத்தம் 8 லட்சம் வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 60 பேனாக்களை இந்த குடும்பத்தினர் பயன்படுத்தி எழுதியுள்ளனர். சாதாரண ஏ-4 அளவுள்ள காகிதத்தை விட 8 மடங்கு பெரிதான ஏ-1 அளவுள்ள காகிதங்களில் இந்த பைபிள் எழுதப்பட்டுள்ளது. தற்போது கின்னஸ் நிறுவனம் இதனை அங்கீகரித்து சான்றிதழ் தர உள்ளது என அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள மார் தோமா தேவாலயத்தின் 50-வது ஆண்டு நிறைவு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த பொன்விழாவை முன்னிட்டு இதனை அங்கு வழங்குவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பிரதியை அந்த தேவாலயத்தின் போதகர் ரெவரன்ட் ஜினு ஏப்பனிடம் குடும்பத்தினர் வழங்கினர்.

தோலினால் கட்டப்பட்ட இந்த புத்தகத்தை அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரத்யேக பேழையில் வைத்து அந்த தேவாலயத்திற்கு மனோஜ் சாமுவேல் குடும்பத்துடன் சென்று வழங்கியுள்ளார். தற்போது ஏ-2 அளவில் பைபிள் புத்தகத்தை மலையாள மொழியில் எழுதி வருவதாக மனோஜ் சாமுவேலின் மனைவி சூசன் சாமுவேல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com