நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி செய்த சுரேஷ், அவரது மனைவி பேச்சியம்மாள் மற்றும் அவர்களது மகன்களை படத்தில் காணலாம்.
தீக்குளிக்க முயற்சி செய்த சுரேஷ், அவரது மனைவி பேச்சியம்மாள் மற்றும் அவர்களது மகன்களை படத்தில் காணலாம்.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி பேச்சியம்மாள் மற்றும் 2 மகன்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு வந்த அவர் திடீரென தான் பையில் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீதும், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் ஓடிச் சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் நம்பேடு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 4 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். நிலத்தின் அளவு குறைவாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் நிலத்தை அளந்துள்ளார். அதில் 3 சென்ட் நிலம் தான் இருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக சுரேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் நிலத்தை விற்ற நபர் சுரேசுக்கு விற்ற இடத்தில் வீடு கட்ட முயன்று வருவதால், தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு மேல் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தினால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com