இளம்பெண்ணை மிரட்டி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

20 வயது இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
கோப்பு  படம்.
கோப்பு படம்.
Published on

சென்னை:

சென்னை யானைக்கவுனி கல்யாணநகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது சித்தியுடன் வசித்து வருகிறார். வியாசர்பாடி உதயசூரியன்நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனுசாமிக்கு (வயது 36), இளம்பெண்ணின் சித்தியுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் முனுசாமி, அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு அங்கு சென்ற முனுசாமி, இளம்பெண்ணின் சித்திக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்துள்ளார்.

இதன்பின்பு, இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதில், இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தவறாக பேசியதால் மன வேதனை அடைந்த இளம்பெண் மண்எண்ணெயை குடித்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இந்தநிலையில் அவருக்கு குழந்தை பிறந்தது.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் முனுசாமி மீது பூக்கடை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் முனுசாமி மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எல்.ஸ்ரீலேகா, ‘பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தையுடன் எந்தவித ஆதரவும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார். எனவே, அவருக்கு நிர்பயா நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com