

கலவை:
கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவரின் மனைவி பொற்கொடி (வயது 38). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகள் திருமணத்துக்கு எந்தவித பண ஏற்பாடும் ஆனந்தன் செய்யவில்லை.
இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் மனமுடைந்த பொற்கொடி எலி மருந்தை சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கலவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக வாலாஜா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொற்கொடி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.