எப்ஐஆர் எங்கே? சட்டத்தைவிட நீங்கள் மேலானவர்களா? -முன்னாள் கமிஷனருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

எப்ஐஆர் இல்லாமல் எந்த விசாரணையும் இருக்க முடியாது என்று மும்பை முன்னாள் கமிஷனரிடம் ஐகோர்ட் தெரிவித்தது.
மும்பை முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்
மும்பை முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்
Published on

சென்னை:

மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் 100 கோடி ரூபாய் மாமூல் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி தெரிவித்தாக முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங் புகார் கூறினார். இது தொடர்பாக அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி அனில் தேஷ்முக் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மந்திரி அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காவல் துறை அதிகாரி பரம் வீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், பரம் வீர் சிங்கிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

நீங்கள் ஒரு போலீஸ் கமிஷனர், உங்களுக்காக ஏன் சட்டத்தை புறந்தள்ள வேண்டும்? காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் சட்டத்திற்கு மேலானவர்களா? நீங்கள் சட்டத்திற்கு மேலானவர் என்று சொல்கிறீர்களா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

காவல்துறையில் மிக உயர்ந்த பதவி வகித்த அதிகாரியிடம் இருந்தும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒருவரிடமிருந்தும் வரும் கடினமான உண்மைகள் இவை என பரம் வீர் சிங் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிமன்றம், ‘உங்கள் புகார் குறித்து விசாரிக்க முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) இருக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கே எங்கே? முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதிலிருந்து உங்களை தடுத்தது யார்? எப்ஐஆர் இல்லாமல் எந்த விசாரணையும் நடத்த முடியாது.

விசாரணையை சிபிஐவிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தவிடும்படி கேட்கிறீர்கள். எப்.ஐ.ஆர் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை விவரங்கள் எங்கே? அது இருந்தால் சி.பி.ஐ.க்கு ஒப்படைக்கலாம்’ என கூறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com