கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு இயக்க ஏற்பாடு

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க வட்டமிடும் பணி நடக்கிறது.
சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி செல்வதற்கு வசதியாக வட்டமிடும் பணி நடந்தது
சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி செல்வதற்கு வசதியாக வட்டமிடும் பணி நடந்தது
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன்அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்க்க படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. கடந்த 10-ந்தேதி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். படகு போக்குவரத்தும் இயக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் இதுவரை விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதற்கிடையில் படகு போக்குவரத்து இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் அமைந்துள்ள கியூசெட்டில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்வதற்கு வசதியாக வட்டமிடும் பணி தீவிரமாக நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com