டிரம்ப்
டிரம்ப்

அமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறை: டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்கு

அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபைடன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவர் கடந்த ஜனவரி 20-ந் தேதி அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அதற்கு முன்னதாக 6-ந் தேதி அமெரிக்க பாராளு மன்றத்தில் ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக எம்.பி.க்கள் கூட்டு கூட்டம் நடந்த போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு டிரம்ப்பின் பேச்சுக்களே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து டிரம்ப் மீது தகுதி நீக்க தீர்மானத்தை ஜனநாயக கட்சியினர் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றினர். ஆனால் செனட் சபையில் ஆதரவு இல்லாததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதற்கிடையே பாராளுன்ற வன்முறை தொடர்பாக கடந்த மாதம் டிரம்ப் மீது ஜனநாயக கட்சி எம்.பி. பென்னி தாம்சன், மிசி சிப்பி மாகாண கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி எம்.பி. (கலிபோர்னியா மாகாணம்) எரிக் சுவால்வெல், வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில், பாராளுமன்ற வன்முறை தொடர்பாக டிரம்ப், அவரது டொனால்டு ஜூனியர் மற்றும் டிரம்பின் வக்கீல் ரூடி கியுலியானி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம், தேர்தல் திருடப்பட்டு விட்டதாக திரும்ப திரும்ப பொய்களை கூறினார். இறுதியில் திருடப்படுவதை நிறுத்த வாஷிங்டனில் திரளுமாறு தனது ஆதரவாளர்களை அழைத்தார். அமைதியான ஆட்சி அதிகார மாற்றத்துக்கு எதிராக செயல்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com