

திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சார்பதிவாளர் வெங்கடேஸ்வரனின் கார் மற்றும் டிபன் பாக்ஸ், சட்டை பாக்கெட்டுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 கவர்களில் இருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ஆய்வின்போது சார்பதிவாளர் வெங்கடேஸ்வரனிடம் இருந்து ரூ.1.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை அவருக்கு பத்திர எழுத்தர்கள் வழங்கியுள்ளனர் என்றனர்.
தென்காசி மாவட்டம் கடையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 6 மணி நேரம் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.14,500 பறிமுதல் செய்யப்பட்டது.
மார்த்தாண்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ரூ.1.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர்- புரோக்கர்கள் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு அருகே உள்ள மாருதி நகரில் இருக்கும் டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு 8 மணி முதல் அதிகாலை வரை அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இது தொடர்பாக 3 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய அதிகாரி குறித்த டைரியும் சிக்கியுள்ளது.
காட்பாடி சோதனை சாவடியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விரட்டி சென்று லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனை சாவடியில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.