வத்திராயிருப்பில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்

வத்திராயிருப்பில் சாலை வசதி இல்லாததால் குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கி நிற்கும் மழைநீர்
தேங்கி நிற்கும் மழைநீர்
Published on

வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்டது சத்திரம் தெரு. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அதில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் தண்ணீர் தேங்குவதால் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர்.

இந்த சாலை வழியாக தான் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகங்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர். இவ்வழியாக செல்லும் வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. மழைக்காலங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

இந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு சத்திரம் தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com