வந்தவாசியில் ஜாமீனில் வந்த ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை - 10 பேர் கும்பல் வெறிச்செயல்

வந்தவாசி அருகே ஜாமீனில் வெளிவந்த ஆட்டோ டிரைவரை மூகமுடி போட்ட 10 பேர் கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்தவர் நசீர்கான் (30).

இவர் கடந்த நவம்பர் மாதம் வரை வந்தவாசி தாலுகா அலுவலகம் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகேயுள்ள நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

அப்போது அப்துல்கலாம் என்ற பெயரில் இருந்த ஆட்டோ சங்கத்தை கட்சி சார்பில் மாற்ற முயன்ற சம்பவம் தொடர்பாக அதே ஆட்டோ சங்கத்தில் இருந்த ஆட்டோ டிரைவரான மஸ்தான்(28) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து நசீர் கான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தரணிதரன் (20), தாமோதரன் (22) ஆகியோர் உதவியுடன் கடந்த நவம்பர் மாதம் மஸ்தானை ஆட்டோ சவாரிக்கு அழைத்து சென்றனர்.

தழுதாழை கூட்டு சாலை அருகே சென்றபோது எனது நண்பர் நசீர் கானிடம் தகராறு வைத்துக் கொண்டால் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவோம் என கூறி மஸ்தானை கழுத்தில் வெட்டி ஆட்டோவை கடத்தி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தரணிதரன், தாமோதரன்,நசீர் கான் ஆகியோர்களை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். 3 பேரும் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த நசீர் கான் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி விட்டு செய்யாறு தாலுகா மாங்கால் கூட்டு சாலையில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்தார். தனது மனைவி சாகினா (25) என்பவருடன் அங்கேயே தங்கி வியாபாரம் செய்து வந்தார்.

தேர்தலுக்காக. 2 நாட்களாக கடை விடுமுறை என்பதால் மாங்காள் கூட்டு ரோட்டில் இருந்து வந்தவாசியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு 10.30 மணியளவில் மனைவியுடன் நசீர் கான் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கொலை செய்வதற்காக திட்டமிட்ட 10 பேர் கும்பல் அங்குள்ள தெருவிளக்குகளை அனைத்து விட்டு காத்திருந்தனர்.

கோட்டைக்குள் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளி அருகே நசீர்கான் சென்றபோது வளைவில் முகமூடி அணிந்த 10 பேர் கொண்ட கும்பல் நசீர்கானை சரமாரியாக வெட்டினர்.

உயிர் தப்பிக்க நசீர்கான் அருகே உள்ள ஒரு வீட்டுக்குள் ஓடினார். அவரை விரட்டி சென்று கும்பல் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயம் அடைந்த நசீர்கான் துடிதுடித்து இறந்தார். அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை0 கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். நசீர் கானை முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com