

பொங்கலூர்:
கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அக்ராந்தி நகரை சேர்ந்தவர் கணபதி, இவரது மகன் முத்துராமன் (வயது 36). இவர் பொங்கலூரில் தங்கி இந்த பகுதியில் வீட்டு உபயோகப்பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காமநாயக்கன்பாளையம் அருகே எதிரே வந்த வேன் மோதி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துராமன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.