கல்குவாரியில் 20 பேர் உயிரோடு புதைந்தனர்- 300 அடி ஆழத்தில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்

உத்திரமேரூர் அருகே குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மேலும் கற்குவியலுக்குள் சிக்கி உள்ள 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கல்குவாரி
கல்குவாரி
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மதூர் பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று காலை குவாரியில் இருந்த கற்களை தொழிலாளர்கள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது ஏற்கனவே கற்கள் வெட்டப்பட்ட சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

காலை 9 மணியளவில் கல்குவாரியின் ஒரு பகுதியில் இருந்த கற்குவியல் திடீரென சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு பாறைகள் சரிந்து விழுந்து கிடந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

பெரிய அளவிலான கற்கள் வாகனங்கள் மீது குவிந்து கிடந்ததால் அதனை அப்புறப்படுத்துவதில் பெரும் சவால் ஏற்பட்டது. உடனடியாக கற்குவியலுக்குள் கிடந்தவர்களை மீட்க முடியவில்லை.

கற்கள் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். அவர்கள் உடல் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

மேலும் கற்குவியலுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த கல் குவாரிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.

கற்கள் சரிந்து விழுந்த இடம் மிகவும் மேடாகவும் குறுகிய பாதையாகவும் இருப்பதால் மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. அங்குள்ள பாதையில் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்வதற்கு காத்திருக்க வேண்டும். அந்த வாகனம் வந்த பின்னரே கல்குவாரிக்குள் செல்ல முடியும்.

இதனால் மீட்பு பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கற்குவியலுக்குள் 6 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே படுகாயம் அடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கற்கள் சரிந்து விழுந்தபோது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அங்கு இருந்துள்ளனர். கற்கள் சரிவதை கண்ட அவர்கள் சிதறி ஓடியபோது 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் கல்குவாரி உள்ள மதூர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com