

பல்லடம்:
நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டைகள் ஏற்றி கொண்டு நேற்றிரவு லாரி ஒன்று புறப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் நிலையம் அருகே கொசவம்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது , திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியது.
பின்னர் அங்குள்ள ஒர்க்ஷாப் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விட்டு, பெட்டிக் கடைக்குள் புகுந்தது. மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவு நேர ஊரடங்கால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இல்லையென்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.
விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். விபத்தில் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் சேதமடைந்தன. பெட்டிக்கடையில் இருந்த பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததன் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் யாரென்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் மது அருந்தி விட்டு லாரிகளை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று மது குடித்து விட்டு லாரி ஓட்டி வந்த டிரைவரால் காமநாயக்கன் பாளையம் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே குடிபோதையில் ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.