

திருச்சி:
ஆயுர்வேத மருத்துவர்களும் இனி அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும், நவீன அறிவியல் மருத்துவ முறையையும், ஆயுர்வேத மருத்துவ முறையையும் இணைத்து ஒருங்கிணைந்த கலப்பட மருத்துவ முறையை உருவாக்க மத்திய அரசு கொள்கை வகுத்து வருவதாகவும் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து கடந்த 8-ந்தேதி இந்திய மருத்துவ சங்க திருச்சி கிளை நிர்வாகிகள் திருச்சியில் கலெக்டர் அலுவலகம், சத்திரம் பஸ்நிலையம் உள்பட 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து 11-ந் தேதி தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கவில்லை. மருத்துவமனைகளின் முன்பு வேலை நிறுத்தம் குறித்து சுவரொட்டியும் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பலர் அவதி அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் 130 மருத்துவமனைகளும், 1,300 புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.