

சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கூட்டணி வைத்தோ அல்லது தனியாகவோ போட்டியிட இருக்கிறது. இதற்கான வேலைகளை கட்சி தொண்டர்களும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் மேற்கொண்டு வருகின்றனர்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தெரிவித்தது.
இதற்கிடையே, டிசம்பர் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக பரப்புரை செய்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்குகிறார்.
இரண்டாம் கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று முதல் 22-ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.