மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி?

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கமல்ஹாசன் நம்புவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஓராண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அக்கட்சி சார்பில் களம் இறங்கிய வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளை பெற்றனர்.

கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் கமல் கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை பெற்றனர். வடசென்னை தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 167 வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்தது.

தென்சென்னையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465 ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்று இருந்தது. மத்திய சென்னையில் 92,249 ஓட்டுகள் கிடைத்து இருந்தது. இந்த 3 தொகுதிகளில் தென்சென்னையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி அதிக ஓட்டுகளை வாங்கி இருந்தது.

இதையடுத்து தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 18,723 ஓட்டு கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கமல்ஹாசன் நம்புவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தி.நகர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளிலும் கமல் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் அதற்கேற்ப அவர் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சிறிய பரப்பளவு கொண்ட தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2 அல்லது 3 நாட்களுக்குள் பிரசாரத்தை முடித்துக்கொள்ளும் வகையில் சிறிய தொகுதியும் கமல்ஹாசனுக்காக தயாராகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com