திருப்பத்தூரில் ஒரே தெருவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் தொடர் கொள்ளை

திருப்பத்தூரில் ஒரே தெருவில் உள்ள 5 வீடுகளில் கொள்ளையர்கள் வீடு புகுந்து நகை, பணம், பாத்திரங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அபாய் தெருவை சேர்ந்தவர் அன்பு. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 41). இவர் தனது குழந்தைகளுடன் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த 2 மர்ம ஆசாமிகள் முத்துலட்சுமியின் குழந்தை பூமிஸ் அணிந்திருந்த ½ பவுன் செயின், 250 கிராம் வெள்ளி கொலுசு, மற்றொரு குழந்தை கவிக்சா அணிந்திருந்த 130 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

அதே தெருவில் வசிக்கும் கிருஷ்ணன் (49) என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த நகை, ரூ.4 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். இதேபோல சிவக்குமார் (40) என்பவருடைய வீட்டில் அன்னக்கூடையையும், மளிகைகடை நடத்திவரும் ஜமீல் (35), ஆனந்தன் (49) ஆகியோர் வீட்டில் புகுந்து அலுமினியம், பித்தளை பாத்திரங்களையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.

ஆனந்தன் வீட்டில் திருடிக்கொண்டு சுவர் ஏறி உள்ளனர் சத்தம் கேட்டு ஆனந்தன் மற்றும் அவரது மனைவி கூச்சலிட்டபடி மர்ம நபர்கள் 2 பேரையும் துரத்திச் சென்று உள்ளனர். இதனால் மர்ம ஆசாமிகள் ஆனந்தன் வீட்டில் திருடிய பாத்திரங்களை மட்டும் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் 5 பேரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து கொள்ளையடித்த 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் தொடர்ந்து 5 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com