

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ உதவி செய்து வருகின்றனர்.
சில நேரங்களில் எல்லை அருகில் உள்ள கிராம மக்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மோர்ட்டார் குண்டுகளை வீசுவதும் உண்டு. அதுபோன்றுதான் இன்றும் உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மூன்று பொதுமுக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேர் உரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தனர். இரண்டு இடங்களில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உரி செக்டாரில் இருவரும், குரேஸ் செக்டாரில் ஒரு வீரரும் வீரமரணம் அடைந்தனர்.