ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தராது- கருத்துகேட்பு கூட்டத்தில் கலெக்டர் உறுதி

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போராட்டக்காரர்களும், பொதுமக்களும் அங்கிருந்து விரட்டினர்.
கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

இதை எதிர்த்தும் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் தினமும் 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு உற்பத்தி கூடங்கள் உள்ளன. எனவே ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்குவோம் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி தரலாம் என கூறியது.

மேலும் தமிழக அரசு சார்பில் இன்று நடைபெறும் விசாரனையின் போது தங்களது முடிவினை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் காலை 8 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

அதில் பொதுமக்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட குழுவினர், அரசியல் கட்சியினர் என பலரும் வந்திருந்தனர். அப்போது குறிப்பிட்ட சிலரை மட்டுமே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைவரையும் அனுமதிக்க கோரியும் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் பொது மக்கள், போராட்ட குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதனை வலியுறுத்தி திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க போராட்ட குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் குறுக்கு வழியில் செயல்பட வேதாந்தா நிறுவனம் முயற்சிப்பதாகவும், 13 பேர் சாவுக்கு காரணமான ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்க விடமாட்டோம், ஆக்சிஜன் இல்லாமல் உயிரை விட்டாலும் விடுவோமே தவிர ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜனை பெறமாட்டோம் என ஆவேசமாக கூறினர்.

பின்னர் பதிலளித்த கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு. எனவே ஆலையை திறக்க தமிழக அரசு நிச்சயமாக அனுமதி வழங்காது என கூறினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போராட்டக்காரர்களும், பொதுமக்களும் அங்கிருந்து விரட்டினர்.

கூட்டம் முடிந்த பின்னர் ஆதரவாளர்களை கொண்டு தனியாக கூட்டம் நடத்தக்கூடாது எனக்கூறிய பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்து அங்கேயே நின்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com