நெல்லை அருகே இன்று கோலம் போட வந்த பெண் வெட்டிக்கொலை

நெல்லை அருகே இன்று கோலம் போட வந்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கீழபிள்ளையார்குளம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். லாரி டிரைவர். இவருக்கு பார்வதி(வயது 55) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இவரது பக்கத்து வீட்டில் கணபதி மற்றும் அவரது சகோதரர் காளியப்பன்(40) ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் கணபதி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். காளியப்பன் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து விட்டு தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கும், கணபதி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரது வீடுகளும் அடுத்தடுத்து இருப்பதால் சுப்பிரமணியன் வீட்டு தண்ணீர் கணபதி வீட்டு முன்பு ஓடும் பிரச்சனையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுப்பிரமணியன் மனைவி பார்வதி கோலம் போட வெளியே வந்தார். அப்போது இருட்டில் மறைந்து இருந்த 2 பேர் அவரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது பார்வதி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பார்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பறியும் மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்தபடி நேராக கணபதி மற்றும் காளியப்பன் வீடுகளுக்கு சென்று நின்றுவிட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணைக்காக கணபதி மற்றும் காளியப்பனை தேடி வருகிறார்கள். அவர்கள் தலைமறைவாக உள்ளனர். இதனால் பார்வதியை அவர்கள் தான் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கணபதி, காளியப்பன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com