

அரகண்டநல்லூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்தவர் சிவநேசன். இவர் திருக்கோவிலூர் தெற்கு தெருவில் உள்ள பாஸ்கர் என்பவர் நடத்திவரும் ஆவின் பாலகத்தில், பால் பாக்கெட் ஒன்றை வாங்கினார். பின்னர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்தபோது, அந்த பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் தவளை கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த சிவநேசன் இதுகுறித்து ஆவின் பாலக முகவரிடம் தெரிவித்தார். பின்னர் இத்தகவலை ஆவின் பாலக முகவர் விழுப்புரம் மாண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் அய்யங்கரனிடம் கூறினார். தகவல் அறிந்த ஆவின் அதிகாரி பால் பாக்கெட்டு வாங்கிய சிவநேசன் என்பவரது வீட்டில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்தது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.