

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாது கொட்டியது.
2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. கோழிப்போர்விளை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 24 மி.மீ. மழை பதிவானது.
கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, ஆணைக்கிடங்கு, கன்னிமார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டிய மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42.62 அடியாக இருந்தது. அணைக்கு 653 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 531 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.87 அடியாக இருந்தது. அணைக்கு 313 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 404 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திற்பரப்பில் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.