

சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி தேவேந்திர தெருவை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நரசிம்மராஜ் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அவர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவரை போலீசார் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் நரசிம்மராஜ் கூறும் போது, ‘கடந்த 2003-ம் ஆண்டு எனக்கு சொந்தமான 4½ ஏக்கர் நிலத்தை 2 பேருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தேன். இந்த நிலையில் குத்தகை காலம் முடிவடைந்து சில ஆண்டுகளாகியும் அவர்கள் நிலத்தை எனக்கு திரும்ப கொடுக்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும்பலனில்லை. இதனால் மனமுடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன்’ என்றார்
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலபிரச்சினையில் கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.