

நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேன்மொழி, மாவட்ட செயலாளர் ராஜு, மாவட்ட பொருளாளர் துர்காம்பிகா ஆகியோர் தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் அருண் தம்புராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சத்துணவு ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் ஓய்வு பணிக்கொடையாக வழங்க வேண்டும்.
பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது போல, குறைந்த ஊதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 60 வயதில் இருந்து 62 வயதாகும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 58 வயதில் இருந்து 60 வயதாகும் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.