வெடிகுண்டு வெடித்து ரவுடி பலி - தன்னை தாக்க வந்தவர்களை வீசி கொல்ல முயன்ற போது பரிதாபம்

ஆலப்புழா அருகே தன்னை தாக்க வந்தவர்களை வீசி கொல்ல முயன்ற போது வெடிகுண்டு வெடித்து ரவுடி பலியானார்.
வெடிகுண்டு வெடித்து ரவுடி பலி
வெடிகுண்டு வெடித்து ரவுடி பலி
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது30). பிரபல ரவுடியான இவர் மீது கேரளாவில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் இவரது தலைமையில் ரவுடி கும்பல் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

அருண்குமார் தலைமையிலான ரவுடி கும்பலுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. பல தடவை இரு கும்பல்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த நிலையில் அருண்குமார் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர் கோஷ்டியினர் பயங்கர ஆயுதங்களுடன் அருண்குமாரின் வீட்டிற்குள் புகுந்தனர்.

அவர்கள் நேராக அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியான அருண்குமார் என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த வெடிகுண்டுகளை எடுத்து கொண்டு வெளியில் வந்து எதிர் கோஷ்டியினர் மீது வீச முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு அருண்குமாரின் கையில் இருந்தபோதே வெடித்து விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் அலெக்ஸ் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

வெடிகுண்டு வெடித்ததால் பயந்து போன மற்றொரு ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய அலெக்சை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடிக்கு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது, என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com