கணவன் பிரிந்து சென்ற வேதனையில் அரசு பள்ளி ஆசிரியை வி‌ஷம் குடித்து தற்கொலை

கணவர், மகள் பிரிந்து சென்ற வேதனையில் அரசு பள்ளி ஆசிரியை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது 2-வது மகள் சங்கரி (வயது36). இவருக்கும் பேட்டையான்சத்திரம் திலகர்நகரை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கோபி தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சங்கரி கதிர்காமம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கோபி சங்கரியை விட்டு பிரிந்து சென்று விட்டார். மேலும் கோபி தனது மகளையும் அழைத்து சென்று விட்டார். இதனால் சங்கரி வில்லியனூர் ரங்கசாமி நகரில் புதிதாக வீடு வாங்கி தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது சங்கரியை அவரது தந்தை முனுசாமி பார்த்து விட்டு செல்வார்.

இதற்கிடையே கணவர்- மகள் பிரிந்து சென்றதால் சங்கரி விரக்தியுடன் இருந்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக பள்ளி விடுமுறையால் சங்கரி வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா காரணமாக கடந்த 10 நாட்களாக சங்கரியை பார்க்க அவரது தந்தை வீட்டுக்கு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று முனுசாமி தனது மகள் சங்கரியை பார்க்க வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டு வாசல் கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது. காலிங்பெல்லை அடித்து பார்த்த போது சங்கரி வராததால் சந்தேகமடைந்து அவரது தந்தை முனுசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் அறையில் கட்டில் மேல் மல்லாந்த நிலையில் சங்கரி பிணமாக கிடப்பதை கண்டு முனுசாமி அதிர்ச்சியடைந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது.

கணவர்-மகள் பிரிந்து சென்ற வேதனையால் சங்கரி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து முனுசாமி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com