குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு

ஏலத்திற்கு மொத்தம் 22 லட்சத்து 89 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 15 லட்சத்து 81 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சத்து 8 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் பிரித்து ஏலம் விடப்பட்டது.
தேயிலை தூள்
தேயிலை தூள்
Published on

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் நடைபெறும் தேயிலை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்றன. ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு தேயிலை தூளை கொள்முதல் செய்கின்றனர்.

விற்பனை எண் 19-க்கான ஏலம் கடந்த 13 மற்றும் 15-ந் தேதிகளில் நடைபெற்றது. 14-ந் தேதி வெள்ளிக்கிழமை ரம்ஜான் பண்டிகை என்பதால், மறுநாள் ஏலம் நடந்தது.

ஏலத்திற்கு மொத்தம் 22 லட்சத்து 89 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 15 லட்சத்து 81 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சத்து 8 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் பிரித்து ஏலம் விடப்பட்டது. இதில் 80 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. ஏலத்தில் அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.4 விலை உயர்ந்தது.

ஏலத்தில் மொத்தம் 18 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.22 கோடியே 72 லட்சம் ஆகும். இதில், அதிகபட்சமாக சி.டி.சி. தேயிலை தூள் ஒரு கிலோ ரூ.245-க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் ஒரு கிலோ ரூ.301-க்கும் ஏலம் போனது.

சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.100 முதல் ரூ.103 வரையும், உயர்ந்த வகை தேயிலை தூள் ரூ.160 முதல் ரூ.191 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை ஒரு கிலோ ரூ.105 முதல் ரூ.111 வரையிலும், உயர்ந்த வகை தேயிலை தூள் ஒரு கிலோ ரூ.161 முதல் ரூ.206 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை எண் 20-க்கான ஏலம் நாளை மறுநாளும் (வியாழக்கிழமை), 21-ந் தேதியும் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 24 லட்சத்து 3 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது. இந்த தகவலை குன்னூர் ஏல மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com