

பெங்களூரு:
பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் வாடகை கார் டிரைவர் பிரதாப் என்பவர் திடீரென இறந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அரசு சுற்றுலாத் துறையுடன் இணைந்து வாடகை கார் ஓட்டி வந்த பிரதாப், நேற்று இரவு தனது காருக்குள் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. தீக்காயங்களுடன் போராடிய அவரை சக டிரைவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.45 மணியளவில் இறந்துபோனார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனனர்.
டிரைவர் பிரதாப் சாவுக்கு நீதி கேட்டு சக டிரைவர்கள் விமான நிலைய வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடகை கார் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான பயணிகள் வாகனம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இதனையடுத்து பயணிகள் அனைவரும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளையோ அல்லது சொந்த ஏற்பாட்டில் வேறு வாகனத்தை ஏற்பாடு செய்தோ பயன்படுத்தும்படி விமான நிலையம் கேட்டுக்கொண்டது.