தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம் -பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்
Published on

சென்னை:

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். அப்போது, தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். முதலமைச்சரைப்போல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் பல இடங்களுக்குச் சென்று அப்போது ஆய்வு மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச இருக்கிறார். இதற்காக நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசும்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பு திடீர் சந்திப்பாக கூறப்பட்டாலும், ஏற்கனவே முன் அனுமதி பெற்ற பிறகே இந்த சந்திப்பு நடைபெறுவதாக தமிழக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை முதல் முறையாக சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com