விராலிமலை அருகே அம்மன் சிலையை உடைத்த டெய்லர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கோவிலில் மது போதையில் 3 அடி அம்மன் சிலையை உடைத்த டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அமைந்துள்ளது குளவாய்ப்பட்டி கிராமம். இங்கு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் சாலையோரம் உள்ளது. பூ கட்டும் தொழில் செய்து வருபவர்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.

காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கோவிலுக்கு குளவாய்ப்பட்டி மற்றும் அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது சுந்தரலிங்கம் என்பவர் கோவிலில் பூஜைகள் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு சென்றார்.

குளவாய்ப்பட்டி அருகே உள்ள பேராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). டெய்லராக வேலை பார்த்து வரும் அவர் இரவில் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். திடீரென்று கோவிலுக்குள் சென்ற கண்ணன் சாமி சிலையை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதுள்ளார்.

பின்னர் அங்காளம்மன் சாமி சிலையை உடைத்துள்ளார். இதில் அந்த சிலை இரண்டாக பிளந்தது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீசார் கண்ணனை கைது செய்தனர்.

இன்று காலை போதை தெளிந்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தனக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளதாகவும், டெய்லர் தொழில் நஷ்டம் அடைந்த விரக்தியில் மது போதையில் சாமி சிலையை உடைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்மன் சாமி சிலை உடைக்கப்பட்டதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com