

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சி உதவியாளரான குப்பன் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் சென்று அவருக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரம், குப்பனிடம் விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கு முன்பு தி.மு.க. வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக சாலவாக்கம் ஊராட்சி செயலர் சதீஷ், திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மானாமதி ஊராட்சி உதவியாளர் குப்பன் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.