பெண்களை கிண்டல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் 2 போலீசார் ஓட்டலில் உணவு வாங்க வந்த 2 பெண்களை இரவு நேரத்தில் இங்கு என்ன வேலை என கேட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 43). இவர் கடந்த 12-ந் தேதி ஆரணி காந்தி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் 2 போலீசார் ஓட்டலில் உணவு வாங்க வந்த 2 பெண்களை இரவு நேரத்தில் இங்கு என்ன வேலை என கேட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த ஜெகநாதன் போலீசாரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஜெகநாதன் போலீசாரை ஒருமையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர்கள் ஜெகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், ஜெகநாதனை அழைத்து சமாதானம் செய்து புகார் எதுவும் வேண்டாம் என கூறி அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு தகவல் தெரிந்ததும், அவர் சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com