கோவை பள்ளியில் மாணவர் தேர்தல் - பெற்றோர், மாணவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

வாக்கு எண்ணிக்கை வரும் 30-ந் தேதி நடைபெறும் எனவும், டிசம்பர் 1-ந் தேதி பதவிப்பிரமாணம் நடைபெறும் எனவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மாணவர் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்த மாணவர்கள்
மாணவர் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்த மாணவர்கள்
Published on

கோவை:

கோவை கோட்டைமேடு பகுதியில் நூற்றாண்டைக் கடந்த தனுயார் தொடக்கப்பள்ளியில் தற்போது 135 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரான்சிஸ் கிளமென்ட் விமல் உள்ளார். இப்பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் மாணவர்களுக்குத் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தலைமைப் பொறுப்பு, அதன் கடமைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஏதுவாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போது மாணவர் தலைவர், துணைத் தலைவர். உணவுத் தலைவர், தலைவர், சுற்றுச்சூழல் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு பதவிக்கும் 5-ம் வகுப்பில் பயிலும் தலா 3 பேர் வீதம் போட்டியிட்டனர். கடந்த 25-ந் தேதி பிரசாரம் நடைபெற்றது. இதில், மனு தாக்கல் செய்த மாணவர்கள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று பிரசாரம் செய்தனர்.

இதையடுத்து நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த ஆண்டு பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கும் வாக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வரிசையாக நின்று வாக்களித்தனர். தேர்தல் நாளான நேற்று மாலை 5.30 மணி வரை 200 வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்கு எண்ணிக்கை வரும் 30-ந் தேதி நடைபெறும் எனவும், டிசம்பர் 1-ந் தேதி பதவிப்பிரமாணம் நடைபெறும் எனவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com