கோவில் குளத்தில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவர் பலி

நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
தினகரன்
தினகரன்
Published on

திரு.வி.க.நகர்:

சென்னை கொரட்டூர், வெங்கட்ராமன் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார்-அன்னபூரணி தம்பதி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்களுக்கு தினகரன்(வயது 12) என்ற மகனும் இருந்தார். அவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம் தினகரன், தனது நண்பர்கள் 4 பேருடன் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள கொரட்டூர் சாவடி தெருவில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் குளத்தில் குளித்தார். சுமார் 15 அடி ஆழமுள்ள குளத்தில் ஒவ்வொரு படியாக தண்ணீருக்குள் இறங்கிய தினகரன், திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்தில் மூழ்கி பலியான சிறுவன் உடலை மீட்டனர். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னை ஓட்டேரி சி.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் சிவா (41) நேற்று காலை கொசப்பேட்டையில் உள்ள கந்தசாமி கோவில் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அம்பத்தூர் மேனாம்பேடு டி.என்.இ.பி. காலனியைச் சேர்ந்த முதியவர் கன்னியப்பன் (82) அதே பகுதியில் உள்ள குளத்தில் தவறி விழுந்து பலியானார். இதுபற்றி அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com