

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி அஸ்வத் புருக்காலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், மல்லிப்பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்யும் நாகப்பட்டினத்தை சேர்ந்த சக்திவேல்(வயது41), மணிபாலன்(26), ராஜா(28) ஆகிய 3 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு சிறிய கப்பலில் ரோந்து வந்த இலங்கை படையினர் திடீரென மீனவர்களின் நாட்டுப்படகை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் சக்திவேல், மணிபாலன், ராஜா ஆகிய 3 பேரையும் சிறைப்பிடித்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.