கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு- பாதிரியார் தாமசுக்கு ஆயுள் தண்டனை

கேரளாவில் கன்னியாஸ்திரி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி அபயா
குற்றவாளிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி அபயா
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி இளம் கன்னியாஸ்திரி அபயா(வயது 19) என்பவர் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு துறையும் தற்கொலை என வழக்கை முடித்து வைத்தது. பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 1993-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கொச்சி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

போலீஸ் அதிகாரிகள் கொலைக்கான ஆதாரங்களை அழித்தது, உடற்கூறு பரிசோதனை அறிக்கையை திருத்தியது உள்பட பல்வேறு மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்தது. இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் ஜோஸ் ஆகியோரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.

பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் இடையிலான முறையற்ற உறவை தெரிந்துகொண்டதால் கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 

இந்த வழக்கு திருவனந்தபுரம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில், 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என சி.பி.ஐ. கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பை கேட்டதும் கன்னியாஸ்திரி செபி கதறி அழுதார். பாதிரியார் தாமஸ் கோட்டூர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் டிசம்பர் 23ல் (இன்று) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை சிபிஐ நீதிமன்ற நீதிபதி சனில் குமார் இன்று அறிவித்தார். குற்றவாளிகளான பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். ரூ.6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com