கர்நாடகத்தில் இருந்து லாரிகளில் கடத்திய குட்கா பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

கர்நாடகத்தில் இருந்து லாரிகளில் கடத்தி வந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கொளத்தூர் அருகே போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டைகளையும், கைதான 2 பேரையும் படத்தில் காணலாம்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டைகளையும், கைதான 2 பேரையும் படத்தில் காணலாம்.
Published on

கொளத்தூர்:

தமிழக-கர்நாடக எல்லையில் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே காரைக்காடு சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தமிழகம் வந்த 2 மினி லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

அந்த லாரிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 71 மூட்டைகள் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களுடன் லாரிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். அந்த லாரிகளின் டிரைவர்களான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஜேம்ஸ் ராஜா (வயது 26), திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகத்தில் இருந்து குட்கா பொருட்கள் கடத்திய லாரிகள் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com