பர்கூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

பர்கூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்த சம்பவத்தையடுத்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கான்டிராக்டர். இவரது மனைவி பிரின்சி. இவர்களது மகன் ஹரிஹரசுதன் (வயது 7). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவனுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக வள்ளுவர்புரம் கிராமத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மேலும் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com