

அரசூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கோவுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் மகன் பரத் (வயது 16). இவர் அயன்வேலூரில் உள்ள அரசு பள்ளியில் தற்போது பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 2 மணியளவில் நண்பர்கள் சிலருடன் ஏனாதிமங்கலம் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு குளிக்க சென்றார்.
அங்கு பரத்தும், அவரது நண்பர்களும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பரத்தை காணவில்லை. அவர், நீரில் மூழ்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பரத் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.