

கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் விமரிசையாக மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்பார்கள். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகாசிவராத்திரி விழாவில் சத்குரு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழகத்தில் போக்குவரத்து இல்லாத காலத்திலேயே கிரானைட் கற்களைக் கொண்டு கோவில்களை கட்டியுள்ளனர்.
சமீப காலமாக நான் கோவில்கள் பற்றி பேசி வருகிறேன். எனது கருத்துக்கு சிலர் எதிர்மறையாக பேசி வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோவில்கள் என்பவை வருமானத்துக்கு உரியவையாக கருதப்பட்டு வந்துள்ளன. கோவில்களால் வருமானம் என்ற கருத்து வெட்கப்பட வேண்டிய விஷயம்.
ஆங்கிலேய ஆட்சியில் செயல்பட்டு வந்த கிழக்கிந்திய கம்பெனி கோவில்களை வருவாய்த் துறையின்கீழ் வைத்திருந்தது.
கோவில்களின் நிர்வாகம் பக்தர்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என நான் கூறியதும், சர்ச், மசூதி, குருத்வாரா, சமண கோவில்கள் நிர்வாகத்தை ஏன் அரசு எடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
எந்த வழிபாட்டு தலத்திலும் கைவைக்க அரசாங்கத்துக்கு உரிமையில்லை என்பதையே நாம் வலியுறுத்தி சொல்கிறோம்.
அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடக் கூடாது, மதம் அரசு விஷயங்களில் தலையிடக் கூடாது. இதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன். கோவில்களில் அரசே வேண்டாம் என சொல்லும் நான் அங்கே அரசியலைக் காண்பேனா?
இந்த நாடு பண்பாடு மிகப் பெரிய பண்பாட்டை தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கு இடையிலே ஒரு சரிவு வந்துள்ளது.
இந்த நாடு இப்போது தேர்தலை நோக்கிச் செல்கிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களின் இந்த ஆதங்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை இப்பொழுது எழுப்பப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மக்களின் உயிர்ப்புத் தன்மையை மேலும் தீவிரமாக்குவதற்காக இந்த கோவில் அடிமைநிறுத்து என்ற இயக்கம் இப்போது முன்னிறுத்தப்படுகிறது என தெரிவித்தார்.