கைது
கைது

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது

கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தஞ்சையை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

திருச்சி:

கொரோனா பரவல் காரணமாக திருச்சியில் இருந்து சர்வதேச விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து அதிக அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புனவாசலை சேர்ந்த மணிமாறன் என்ற பயணியிடம் ரூ.36 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான 798 கிராம் தங்கத்தையும், ஒரத்தநாட்டை சேர்ந்த செந்தில் என்ற பயணியிடம் இருந்து ரூ.36 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான 798 கிராம் தங்கத்தையும் உடலில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதரிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com