தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை-ரொக்கம் திருட்டு- போலீசார் விசாரணை

திருவண்ணாமலையிலிருந்து கைரேகை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் கைரேகை நிபுணர் விஜயகுமார் தடயங்களை சேகரித்தனர்.
திருட்டு நடந்த கார்த்திக் வீட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா விசாரணை நடத்தினார்
திருட்டு நடந்த கார்த்திக் வீட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா விசாரணை நடத்தினார்
Published on

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த கம்பன் நகர் பெரியார் வீதியில் வசிப்பவர் கார்த்திக். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டி விட்டு கார்த்திக் திருப்பூர் சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 பவுன் நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி விட்டனர்.

நேற்று காலை கார்த்திக்கின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அருகில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த கார்த்திக்கின் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலையிலிருந்து கைரேகை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் கைரேகை நிபுணர் விஜயகுமார் தடயங்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்றொரு திருட்டு

இதேபோல் வந்தவாசி பெட்டிநாயுடு தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

வெளியூர் சென்றிருந்ததால் இவரது வீடும் பூட்டப்பட்டிருந்தது. இவரது வீட்டின் பூட்டையும் உடைத்து பீரோவில் இருந்த ரூ.4,800 ரொக்கம் மற்றும் 6 பட்டு சேலைகள், வெள்ளி நகைகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com