ஜீன்ஸ் பேண்டில் மறைத்து ரூ.2.13 கோடி தங்கம் கடத்திய வாலிபர்கள் கைது

ஒரே நாளில் கொச்சி விமான நிலையத்தில் ரூ.2.13 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது
கைது
Published on

திருவனந்தபுரம்:

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நெடும்பசேரி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 2 வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் உடமைகளை தீவிர சோதனை செய்தனர்.

இதில் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.2.13 கோடி ஆகும். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிவாசன், பக்ரூதின் உசேன் என்பது தெரிய வந்தது.

அதிகாரிகள் அவர்களை கைது செய்து கொச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஒரே நாளில் கொச்சி விமான நிலையத்தில் ரூ.2.13 கோடி தங்கம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com