

முசிறி:
முசிறியில் துறையூர் செல்லும் சாலையில் திருமுருகன்நகர் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் சுரேஷ் (வயது 37). இவர் நேற்று முன்தினம் ஏலச்சீட்டில் எடுத்த ரூ.2 லட்சத்தை கடையில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, மேஜையின் உள்ளே வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதேபோன்று அதேபகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான உரக்கடையில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து, எலிபசை ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
நள்ளிரவில் இரு கடைகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.