திருவண்ணாமலை அருகே வீடுகளுக்குள் புகுந்த 7 பேர் கொள்ளை கும்பல்

திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பெண்களை தாக்கி நகைகளை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளை
கொள்ளை
Published on

தண்டராம்பட்டு:

திருவண்ணாமை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மெய்யூரில் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் வீடுகள் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

மேலும் வீட்டில் இருந்த பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தெருவில் குவிந்தனர்.

பொதுமக்கள் ஒன்று சேர்வதை கண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். அவர்கள் இருளில் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த கும்பலா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com